திருக்குறள் தமிழ் நன்கு வளர்ச்சி அடைந்து மொழி நிலை யாப்பு நெகிழ்வு அடைந்த பின்பு ஆண்டு பொஆ.9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது என்பது தற்பொழுது பன்னாட்டு பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்களின் கருத்தாக அமைந்துள்ளது
திருவள்ளுவர் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்; என்று கூறுவது தான் வள்ளுவர்க்குப் பெருமையென்று சிலர் எண்ணுகின்றனர். இப்படிக் கூறுவதுதான் தமிழர்க்குப் பெருமை; தமிழர் நாகரிகத்திற்கு உயர்வு; என்று கருதுகின்றனர் சிலர்.
ஒரு புலவர்க்குப் பெருமை ஏற்படுவது காலத்தின் பழைமையைப் பொறுத்தது அன்று; ஒரு நூலுக்கு மதிப்பு உண்டாவது மிகப் பழைமையான நூல் என்பதால் மட்டும் அன்று, பிற்காலத்திலே பிறந்த நூலானாலும், முற்காலத்திலே. தோன்றிய நூலானாலும் மக்கள் வாழ்க்கையோடு இணைத்து நின்று அவர்களுக்கு வழி காட்டும் நூலே சிறந்த நூலாகும். அத்தகைய நூலை ஆக்கிய அரும்புலவரே முதற் புலவர் ஆவார். இந்த உண்மையை உள்ளத்திலே கொண்டவர்கள் திருவள்ளுவர் காலத்தைப் பற்றிக் கலக்கம் கொள்ள வேண்டியதில்லை.
திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின்னே பிறந்ததாயினும் இது ஒப்பும் உவமையும் அற்ற உயர்ந்த நூல். இது: போன்ற நூல் திருக்குறளுக்கு முன்னும் தோன்றியதில்லை; பின்னும் பிறந்தது இல்லை. இது அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
(சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)